திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர் ) தேவராஜி (ஜோலார்பேட்டை ) அ.செ.வில்வநாதன், (ஆம்பூர்), திருப்பத்தூர் நகராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொது, “தொழிலை விரிவு படுத்தவும், அவற்றை பாதுகாக்க வேண்டியும், தொழில் முனைவோரை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
தமிழர்கள் கடல் கடந்து வியாபாரம் செய்தனர் என பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. அப்போது சந்தனம், முது, மிளகு , போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முனைவோர்களை தேடி துபாய் சென்றனர். அது மட்டுமின்றி, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.
5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் 7, 8 – ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கின்றன. இதற்காகத்தான் உள்ளூர் முதலீட்டாளர்களை அழைத்து முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நமது நாட்டின் சராசரி ஜிடிபி 9 சதவீதம் , ஆனால் தமிழகத்தில் ஜிடிபி 11.4. சராசரியை விட நம் அதிகமாக உள்ளோம். இந்திய அளவில் தமிழகம் தொழில் செய்ய வசதி, பாதுகாப்பான மாநில வரிசையில் 3 வது இடம் பிடித்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்க்காக திருப்பத்தூர் மாவட்டத்தின் இலக்கு ரூ.500 கோடி ஆகும். ஆனால் 66 நிறுவனங்கள் மூலமாக 552 கோடி ரூபாய் என நாம் இலக்கை முறியடித்துள்ளோம். இதனால் வழங்கப்பட்ட இலகைக்காட்டிலும் நாம் அதிகமான முதலீடு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதன் மூலம் மறைமுகமாக பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த 1984 -ம் ஆண்டு வாக்கீல், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என நான் தான் அப்போது குரல் கொடுத்தேன் அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் முதலில் பிரிக்கப்பட்டது இதையடுத்து , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. திருப்பத்தூரை சந்தன நகரம் என்று தான் நாங்கள் சட்டப் பேரவையில் குறிப்பிடுவோம்.
தொழில் வளர்ச்சியில் இந்த மாவட்டம் பின் தங்கியுள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் இங்கு 887 தொழிற்சாலைகள் உள்ளன 385 வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் ,553 நெசவு கூட தொழிற்சாலைகள், 672 ரசாயன தொழிற்சாலைகள், 1,266 உணவு சார்ந்த இடங்கள், 449 இயந்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலை 3 ஆயிரத்து 342 இதர தொழிற்சாலைகள் என மாவட்டத்தில் 8 ஆயிரத்து 218 தொழிற்சாலைகள் உள்ளன.
இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 35 சதவீதம் இங்கிருந்துதான் எற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி மூலம் டாலர் வருவாயில் திருப்பத்தூர் மாவட்டம் இந்தியாவில் 2 -ம் இடம் பிடித்துள்ளது. சிட்கோ மூலம் 41 நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன. மதனுார், வாணியம்பாடி ,ஆம்பூர் பகுதியில் தோல் தொழில், நாட்டறாம் பள்ளியில் ஊதுவத்தி ,கந்திலி பகுதிகளில் தேங்காய் கொள்முதல் ஆகிய தொழில்கள் நடந்து வருகின்றன.
அரசிடம் எதாவது கோரிக்கை வைத்தால் அனைத்தையும் செய்து தருகிறது என இங்கு வந்துள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அடைய செய்கிறது.
தனியார் முதலீடு இல்லாமல் எதையும் செய்ய முடியாது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனால்தான் வெளிநாடுகளுக்கு சென்று தனியார் நிறுவனங்களை இங்கு அழைத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், தொழில் முனைவோருக்கு சிறந்த மாவட்டமாக உள்ளது ,மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையாக உள்ளது.
இந்த மாவட்டத்தில் மனித வளமும் போதிய அளவு உள்ளது. துறைகள் மேலும் வளர்ச்சி பெற மாவட்ட ஆட்சியர் மூலமாக என்னிடம் தெரிவித்தால் அதற்கான அனுமதி பெற்றுத்தருவதில் நான் முனைப்புடன் செயலாற்றி அனுமதி பெற்று தருவேன். திருவண்ணாமலையும், திருப்பத்தூரும் எனக்கு ஒன்று தான். இரண்டும் எனது கண்கள் தொழில் முனைவோராக வந்துதிருப்பவர்கள் மாவட்ட வளர்ச்சிக்கு முன் நிற்க வேண்டும் என்றார்.