234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வெற்றி பெற முடியுமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:
நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் கொடுத்துள்ளது. 3 நாளில் வழக்கை முடிக்க போலீசார் விரும்புவது ஏன்? ஓசூர் வந்து என்னிடம் சம்மன் வழங்க மாட்டார்களா? கதவில் சம்மனை ஒட்டியதன் நோக்கம் என்ன? வீட்டு கதவா விசாரணைக்கு வரப்போகிறது? சம்மனை கிழித்தால் என்ன? சம்மன் ஒட்டுவதோடு போலீசாரின் வேலை முடிந்தது. சம்மனை நாங்கள் கிழித்தால் அவர்களுக்கு என்ன? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும். இது எந்த மாதிரியான அணுகுமுறை.
வன்கொடுமை
சம்மன் நான் படிக்க கொண்டு வந்தீர்களா? நாட்டு மக்கள் படிக்கவா? அண்ணா பல்கலை மாணவி வழக்கில் என்ன நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். இது என்ன பாலியல் வழக்கு? அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் விஷயத்தை சொல்லலாம். புகார் மீது விசாரணை நடத்திய பின் தான் குற்றம் நடந்ததா என்பது தெரியும். என்னை சமாளிக்க முடியாமல் தி.மு.க., அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. என்ன காரணம்? விருப்பம் இல்லாத பெண்ணை நான் வன்கொடுமை செய்தது போல் பேசுகின்றனர்.
பெரிய தலைவன்
எவ்வளவு வழக்குகள் இருந்தபோதும் என் மீது ஏன் இவ்வளவு வேகம் காட்டுகின்றனர். என்னை சமாளிக்க முடியவில்லை. ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு வாங்க முடியுமா? உண்மையில் பெரிய கட்சி நான் தான். நான் தான் பெரிய தலைவன். தனித்து நின்று என்னை எதிர்க்க முடியுமா? 234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வீழ்த்த முடியுமா?
தனித்தே நிற்போம்
2026ம் ஆண்டு தேர்தலில் நீங்களும் 234 தொகுதி? நானும் 234 தொகுதி? கூட்டணி ஏதும் இருக்க கூடாது. 2026ம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம். கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் நின்று பார்ப்போம். ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் ஓட்டு கேளுங்கள். நான் சாதாரண விவசாயின் மகன். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.
6 மணிக்கு வருவேன்
நான் நினைக்கும் போது வருவேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்ன ஆனது? அந்த சார் என்பது எந்த சார்? அதிகாரம் நிலையானது என்று செய்யாதீர்கள். போலீசார் ரொம்ப ஆர்வப்படுகிறார்கள். போவேன். மாலை 6 மணியளவில் விசாரணைக்கு போவேன். அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும் அவ்வளவு தானே? இதற்கு முன் நான் சிறைக்கு சென்றதெல்லாம் இல்லையா நான் அஞ்ச மாட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.