மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது.
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 14,246 மகளிர் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர் என்றும், இத்திட்டத்திற்கு இந்த 2025-26 ஆம் ஆண்டில் 13,087 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கொள்கை விளக்கக் குறிப்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான தகுதிகளும், பொருளாதாரத் தகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்பத் தலைவிக்கான வரையறை:
- குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
- ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
- குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அக்குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
- திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
பொருளாதாரத் தகுதிகள்:
- ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு விட்டு உபயோகத்திற்கு 3000 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்.