இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணையை வரும் ஏப்., 28 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதால் அன்றையதினம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
‘உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் தீர்வு காணும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது; பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது’ என, தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் புகார் மனுக்கள் அளித்து இருந்தனர்.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. அதற்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், எம்.ஜி.ராமச்சந்திரன், வா.புகழேந்தி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் விசாரணையை தொடரலாம்.
புகார் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பின், தேர்தல் ஆணையம் விசாரணையை துவக்கலாம்.தேர்தல் ஆணையம் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என உத்தரவிட்ட, பழனிசாமி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28 ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை துவக்குகிறது. அன்றைய தினம் அனைத்து புகார் மனுதாரரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.