‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் தற்போது இருக்கும் தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:
தமிழகம் மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வரும் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படஉள்ளது.
தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் விளைவு
கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தென் இந்தியாவின் மேல் ஒரு கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது.
எல்லாவற்றிலும் முன்னணியில் உள்ள தமிழகம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்போது 39 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. இது 31 தொகுதியாக குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. மக்கள் தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே தொகுதிகள் உருவாக்கப்படவுள்ளன.
8 தொகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது
பெண்கள் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தமிழகம் சாதனைப்படைத்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைப்பதா? மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் 31 எம்.பி.க்களாக எண்ணிக்கை குறையும்
தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில், லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் 8 லோக்சபா தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்.
இரண்டாவது முறையின்படி, மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.
அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்
அதாவது தமிழகத்தில் 39 எம்.பி.,க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.,க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிந்தாலும் நமது பிரதிநிதித்துவம் குறையும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகள் விவாதிக்கப்படும். அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்திற்கான பொது பிரச்னை என்பதால் பாஜகவைத் தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள் என்று கருதப்படுகிறது.