ஆர்.எம் வீரப்பனுக்கு அமைச்சர் பதிவு பறிபோனதற்கு ரஜினியின் பேச்சு முக்கிய காரணமானது. அதை 30 ஆண்டுகளுக்குப்பின்னர் மனம் திறந்து கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
பாட்ஷா பட வெற்றி விழாவில் என்ன நடந்தது? அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார்.
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், ஆர்.எம். வீரப்பன் தி கிங்மேக்கர்” என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.
இதில் ரஜினி பேசிய போது, “பாட்ஷா” திரைப்பட விழாவில், ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாசாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக அவர் இருந்தபோது அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது. அன்றைய சூழலில் எனக்கு தெளிவில்லாமல் இருந்ததால் அவ்வாறு பேசிவிட்டேன்.
இதனை அடுத்து ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டார். “என்னால் இப்படி ஆகிவிட்டதே” என்று எனக்குத் தூக்கமே வரவில்லை. அதனை அடுத்து மறுநாள் காலை நான் அவரிடம் ‘சாரி’ சொன்னபோது, அதைப்பற்றி எல்லாம் அவர் கவலையே படவில்லை.
மேலும், ஜெயலலிதாவிடம் நான் உங்களுக்காக பேசவா? என்று கேட்டபோது, “அதெல்லாம் வேண்டாம். ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்றிக்கொள்ள மாட்டார். நீங்கள் போய் பேசி உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம். அப்படி ஒரு பதவி எனக்குத் தேவை இல்லை” என்று கூறினார்.
இதனை அடுத்து, அவர்தான் ரியல் கிங்மேக்கர் என்பதை அன்றே நான் தெரிந்து கொண்டேன் என்று ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.