திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்த பொன்முடியின் பெண்கள் குறித்த சர்ச்சையான பேச்சால் அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடி கடந்த சில தருணங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கண்டனங்கள் எழுந்தது. மகளிருக்கான இலவச பேருந்து சேவையை ஓசி எனக் கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார் பொன்முடி. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கட்சியின் மேடையில் குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பாலியல் தொழிலாளி தொடர்பாக ஆபாசமாக, கீழ்த்தரமான மொழியில் பேசியிருந்தார்.
பொதுமேடையில் பெண்கள் மத்தியில் பேசிய இவரது பேச்சு சர்ச்சையை வித்திட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ காட்சிகள் வலைதளங்களில் மீண்டும் வைரலாகின. தொடர்ந்து பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி கண்டனங்கள் எழ, பொன்முடியின் கட்சி பதவியை பறித்து திமுக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்தார் அமைச்சர் பொன்முடி. இந்த நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கமாக பதவி மாற்றம் போன்ற அறிவிப்புகள் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளிவரும். ஆனால், பொன்முடி விஷயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொன்முடி துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமைச்சர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருச்சி சிவா நியமனம்
பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவி, கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் திருச்சி சிவா திமுகவின் துணை பொதுச்செயலாளராக செயல்படுவார் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.