சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. விபத்து, தற்கொலை, கொலை போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இத்தகைய போராட்டங்கள் வழக்கமாக நடக்கின்றன.
இதன் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை வலியுறுத்தி இப்படி போராட்டம் நடத்துகின்றனர்.
அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் மற்றும் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதற்குள், பதற்றம் ஏற்படுவதுடன் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டும் என்று போலீஸ் ஐந்தாவது கமிஷன் அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
ராஜஸ்தானில் இறந்தவர் உடல் மரியாதைச் சட்டம், 2023 ஐப் போலவே தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான கமிஷன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இறந்த ஒவ்வொருவருக்கும் கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.
குடும்பத்தினர் உடலை உரிமை கோர மறுத்தால் அல்லது சடலத்தை அடக்கம் செய்ய மறுத்தால், மாநில அதிகாரிகள் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இறுதி சடங்கில் இடையூறு செய்வது, சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.