கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார். அதன் மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதனடிப்படையில் நேற்று தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
சென்னை, தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
திராவிட மாடல் அரசு சாதாரண மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முதல்வர் மருந்தகங்கள் மூலமாக மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். மருந்தகம் அமைக்க தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்கநிலையாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர் மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவை குறைக்கவே முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்படும் வகையில் மருந்தாளுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் பணியை சிறப்பாக செய்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாராட்டுகிறேன். முதல்வர் மருந்தகங்களின் திட்டத்திற்கான நோக்கம் சிதையாமல் அதை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
மக்களின் தேவைகளை பார்த்துப் பார்த்து செய்து வருகிறோம். எல்லா துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. மக்களின் சுமையை குறைக்க.. இது சாமானிய மக்களுக்கான அரசு. மக்களுக்கு நன்மை செய்வதில் திராவிட மாடல் அரசு கணக்குப் பார்ப்பதில்லை.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.