தே.மு.தி.க வுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் இந்தக் கூட்டணி தொடர்ந்தது.
அப்போது, தே.மு.தி.க.வுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட் ஒன்று தருவதாக அ.தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி பேட்டியளித்த தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “ராஜ்யசபா சீட் குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்றும் அறிவித்தார்.
இதுகுறித்து, சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று முன்தினம் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை” என்று மறுத்துவிட்டார்.
இதனால், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.