நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் எந்த ஜனநாயகமும் இல்லை என்று கூறியுள்ள ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் நாதக சார்பில் ஜெகதீச பாண்டியன் போட்டியிட்டார். நாதகவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த அவர் நேற்று 5 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டு கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு மேலும் ஒரு சரிவு ஏற்பட்டுளளது. அவரது சமீபத்திய பெரியார் குறித்த பேச்சு பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.
இதற்கிடையே ஜெகதீச பாண்டியன் அவரது அறிக்கையில், நாதக-வில் சீமானின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்? வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது.
இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும். தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு, விலகுகிறேன் அண்ணா!” என்று கூறியுள்ளார்.