மீண்டும் தங்கம் விலை உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த தங்கத்தின் விலை கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட நிலையிலேயே ஏறி இறங்கி தள்ளாடி வந்தது.
எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி அந்த நிலையை எட்டிப்பிடித்தது.
கடந்த 31ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி1ம் தேதி மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சம் தொட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (10ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரன் ரூ.64 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.