உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை முத்து மகன் முத்துகுமார் (வயது 53). இவர் நெய்வேலி என்எல்சியில் பணியாற்றி வருகிறார்.
இவர் சொந்த கிராமத்தில் அவரது உறவினரின் கரும காரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மனைவி தேவி (வயது 40), மகன் பிரவீன் (வயது 12) ஆகிய 3 பேரும், நெய்வேலியில் இருந்து உளுந்தூர்பேட்டை அஜித் நகருக்கு இருசக்கர வாகனத்தில் அதிகாலை புறப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அஜீஸ் நகர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகாமையில் உள்ள கல் குட்டையில் தாய் மகன் இருவரும் இறந்த நிலையில் மிதந்து கிடந்தனர். மேலும் கணவன் முள்வேலி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்து கிடைப்பதை கண்டு உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளர் வீரமணி, எடைக்கால் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.