அ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது :-
செய்திகளில் வெளியானது போல நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசின் நிதி மூலம் நிறைவேற்ற உத்தரவிட்டது, ஜெயலலிதா தான். அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், இதற்காக இ.பி.எஸ்க்கு பாராட்டு விழா நடத்தபப்ட்டுள்ளது. அதனால்தான் பல்வேறு கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். விவாதங்களுக்கு எல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்சியில் மிகவும் மூத்த தலைவர் செங்கோட்டையன்தான். அ.தி.மு.க., ஒன்றாக இணைய வேண்டும் என்று மனசாட்சிப்படி நினைப்பவர். ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். என்னை தோற்கடிப்பதற்காக, ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தார் ஆர்.பி.உதயகுமார். இப்படியாக இ.பி.எஸ் கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார்.’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து அ.தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு அப்பீல் செய்தால், தங்கள் தரப்பையும் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி, ஓ.பி.எஸ் தரப்பில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.