தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் நெடுதுாரம் பயணிக்கும் பயணிகள் பணப்பயன்பாடு இல்லாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களும் உள்ளன.
திண்டுக்கல் டூ சென்னை, விழுப்புரம், நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் மக்கள் செல்கின்றனர். அவர்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் சொகுசு பஸ்கள் 19 இயக்கப்படுகின்றன.
கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு :
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கூடுதலாக 4 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கண்டக்டர்களுக்கு கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் வகையிலான மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மிஷின்களை தினமும் சார்ஜ் செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது விரைவு போக்குவரத்துக் கழக சொகுசு பஸ்களில் நீண்ட துாரம் பயணிக்கும் பயணிகள் கூகுள் பே, போன் பே, பே.டி.எம். போன்ற செயலிகளை பயன்படுத்தி டிக்கெட்டுக்கான பணத்தை எளிதில் அனுப்புகின்றனர். இதனால் பயணிகள் சிரமின்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டர்களுக்கும் பயணிகளிடம் பெறும் பணத்திற்கு மீதி சில்லறை வழங்குவதற்கு சிக்கல் இல்லாமல் இந்த மிஷின் உதவியாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஜயகுமார் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன் எங்கள் டெப்போக்களுக்கு மேல் அதிகாரிகள் புதிதாக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மிஷின்களை கொண்டு வந்தனர்.
முதல் கட்டமாக அதை பயன்படுத்துவதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஸ்களில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் பொது மக்கள் தங்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தால் கூட செல்போன் ஆப்களை பயன்படுத்தி டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி பயணிக்கலாம் என்றார்.