சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் முதலீடுகள் செய்யப்படுகின்றன’ என்று மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தி.ரு.வி.க.நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்து இருக்கிறோம். வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராகத்தான் கவர்னர் செயல்படுகிறார். அதுவும் எங்களுக்கு நன்றாகத் தான் இருக்கிறது. இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். கவர்னரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும்.
ஈ.வெ.ராவை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை.
வேண்டும் என்றே திட்டமிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை இருப்பதாக பெரிதுபடுத்துகிறார்கள். இதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாகத் தான் இருக்கிறது.
அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகளில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.