பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்.
தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். வருங்காலத்தில் இது போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வி துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுப்போம்.’ இவ்வாறு அவர் கூறினார்.