தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெறும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் டி.இ.ஏ.எல்.எஸ் எனப்படும் தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஒத்துழைப்பு திட்டத்தை அரசு பள்ளிகளில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் என்பது அரசு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்வது ஆகும்.
முன்னதாக 3 மாவட்டங்களை சேர்ந்த 14 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில் 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தால் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக கிடைக்கும்.
அப்படியெனில் ஆசிரியர்களின் வேலை குறையுமா? கடைசியில் ஆசிரியர்களுக்கே வேலை இல்லாமல் போய்விடுமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அப்படியில்லை. ஆசிரியர்களின் செயல் திறன்களை மேம்படுத்தும் வகையில் தான் தொழில்நுட்ப வசதிகள் பயன்படும். அவர்களின் வேலைக்கு ஒருபோதும் பிரச்சினை இருக்காது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு HTML, C++, Python, Game Development, Artificial Intelligence ஆகியவை கற்று தரப்படும். இதற்காக அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் கைகோர்த்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கல்விக்கான பாடத்திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தான் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.