அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமர் கோயிலின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் நிதி மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது. மோசடி நபர்கள் கோயிலின் பெயரில் நன்கொடை வழங்க கோரி சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறியதாவது:
ராமர் கோயிலின் பெயரைச் சொல்லி கியூஆர் கோடும் மூலம் ஸ்கேன் செய்து ராமர் கோயிலுக்கு நன்கொடை செலுத்துமாறு செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை உண்மை என நம்பி பொது மக்கள் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டாம். நீங்கள் அனுப்பும் பணம் மோசடியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்று விடும்.
ராமர் கோயியிலுக்காக நன்கொடை வசூலிக்க ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா இதுவரை யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சகம், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் துறை தலைவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூஆர் கோடு போன்ற டிஜிட்டல் நிதி மோசடிகளில் பக்தர்கள் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என வினோத் பன்சால் கேட்டுக் கொண்டார்.