எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அறிவிப்பு
மாநில துணைநிலை ஆளுநரின் தேனீர் விருந்தை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேனீர் விருந்துகளில் நானும் எங்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாக மாறி உள்ளது. ஆளுநர் பாஜக தலைவர் போல் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் விடுத்துள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்து அழைப்பை, புதுச்சேரி மாநில தி.மு.க. புறக்கணிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.