எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எம்.பி.க்கள், சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை பெறுகின்றனர். சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி அலவன்சாக மாதத்திற்கு ரூ.70,000 மற்றும் அலுவலக அலவன்சாக மற்றொரு ரூ.60,000 பெறுகிறார்கள்.
சலுகைகளைப் பொறுத்தவரை, எம்.பி.க்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெறுகிறார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 34 உள்நாட்டு விமானங்களையும், தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக வரம்பற்ற முதல் வகுப்பு ரயில் பயணத்தையும் பெறுகிறார்கள்.
தற்போதைய சம்பள உயர்வு குறித்து பார்லிமென்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-
எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆகவும், டி.ஏ., அலவன்ஸ் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும், ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31,000 ஆகவும், கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிடப்படுகிறது.
1954 ம் ஆண்டு பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.
இவ்வாறு பார்லிமென்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது.