பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முறைப்படி வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னதாக, பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதியில் கடந்த 23ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.