2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது.
1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல் வழக்கு. 1989ம் ஆண்டில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியைப் பறிகொடுத்ததற்கு இந்த ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த வழக்கு இப்போது மீண்டும் புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது.
போஃபோர்ஸ் ஊழல் தொடர்பாக தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் இடம் உள்ள முக்கிய தகவல்களை வழங்கக் கோரி அமெரிக்க அரசுக்கு இந்தியாவின் சிபிஐ, கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
1986ம் ஆண்டில் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது ஸ்வீடனைச் சேர்ந்த AB Bofors என்ற நிறுவனத்திடம் ஆயிரத்து 433 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது.
இதற்காக இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு போஃபோர்ஸ் நிறுவனம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி நிறுவனம் 1987ம் ஆண்டில் செய்தி வெளியிட்டது.
1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததில், போஃபோர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 1990ம் ஆண்டில் போஃபோர்ஸ் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 1991ம் ஆண்டில் வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.
போஃபோர்ஸ் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய வணிகர் ஒட்டாவியா குவாட்ரோச்சி மீது 2000ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2004ம் ஆண்டில் அப்போது உயிரிழந்துவிட்ட ராஜிவ் காந்தி உள்பட குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 2011ம் ஆண்டில் குவாட்ரோச்சியும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து போஃபோர்ஸ் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், போஃபோர்ஸ் லஞ்சப் பணம் செலுத்தப்பட்டிருந்த ஸ்விஸ் வங்கிக் கணக்கை, தான் கண்டறிந்தபோது ராஜீவ் காந்தி மிகவுன் ஆத்திரம் அடைந்ததாக துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் 2017ம் ஆண்டு கூறினார்.
இதன் அடிப்படையில் அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப உள்ளதாக கடந்த அக்டோபரில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது. சிபிஐயின் இந்த நடவடிக்கையின் மூலம் போஃபோர்ஸ் வழக்கு புத்துயிர் பெறும் என்று கருதப்படுகிறது.