புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுவகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையான நோட்டை மிகத் துல்லியமாக புதிய வகை 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சிடப்பட்டு இருப்பதாகவும், தரத்திலும், அச்சிலும் நிஜமான 500 ரூபாய் நோட்டுக்கு கொஞ்சம் குறையாமல் கள்ள நோட்டு உள்ளது என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கள்ள நோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய அரசு, ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே கள்ள நோட்டை கண்டுபிடிக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளது. அதன்படி கள்ள நோட்டுகளில் “RESERVE BANK OF INDIA” என்ற சொற்றொடரில் “RESERVE” இல் உள்ள “E” என்ற எழுத்து தவறுதலாக “A” என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், வங்கிகள், செபி போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளை கண்காணிக்க இந்த ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு அவற்றை கண்டுபிடிக்க இயந்திரங்களை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.