டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் 28,500க்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்றார். கெஜ்ரிவால் 24,500க்கும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்றார். கடைசி சுற்று முடிவில், 3,800க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் மூன்றாமிடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டார். தன் தாயார் ஷீலா தீட்சித்தை, அதே தொகுதியில் நேருக்கு நேராக நின்று தோற்கடித்த கெஜ்ரிவாலை, சந்தீப் தீட்சித் பழி வாங்கி விட்டதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிசோடியா தோல்வி
ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ.க சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கர்தார் சிங் தன்வார் 38,675 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,081 ஓட்டுகள் பெற்று, 594 ஓட்டுகள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கெஜ்ரிவால் முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்து இருப்பது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
அதிஷி வெற்றி
இதற்கிடையே, கல்காஜி தொகுதியில் தற்போதைய டெல்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ.க சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், 47 ஆயிரத்தும் மேற்பட்ட ஓட்டுகளைப் பெற்று, அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.