தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தீவிர கவலைக்குரியது என்று தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழக அரசு மற்றொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனங்களில் யு.ஜி.சி. தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4-ம் தேதி அன்று விசாரித்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், `இந்த விவகாரத்தால் மாநில அரசும், மக்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்’ என்று குறிப்பிட்டனர்.
இந்த சூழலில் இந்த வழக்கை நீதிபதிகள் வியாழக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும் இவ்விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேசி 24 மணி நேரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
“ தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன் என்பது குறித்து ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்,” என்று கூறி வழக்கு விசாரணையை நாளை (இன்று) காலைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.
`தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்’ என்று ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. காலை விசாரணை நடந்த நிலையில் மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
12 மசோதாக்கள் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை? 2 மசோதாக்களை ஏன் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார்? அனைத்து மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தும் இரண்டை மட்டும் அனுப்பியது ஏன்?
அரசியலமைப்பு விதி 200ஐ தவிர்த்து வேறு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தை விளக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரத்தையும், பதவியையும் குறைத்து மதிப்பிடவில்லை.
மசோதாவை கிடப்பில் போடும் ஆளுநரின் நடவடிக்கையை மட்டும் முடிவு செய்ய உள்ளோம். நிறுத்திவைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறி, விசாரணையை இன்று காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர்.