தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை தமிழக அரசு வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 2023-24 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் கடந்த 18ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் படி 2023-24ஆம் நிதியாண்டுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலம் தரப்படும் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.