உச்சநீதிமன்ற அறிவுரையின்படி இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதா மற்றும் கோப்புகளுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டுள்ளார். விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என அறிவுரை வழங்கும்படி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சந்திரசூட் தலைமையிலான அமர்வு
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்கு நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. மேலும் 2வது முறையாக மசோதா அனுப்பி வைக்கப்படும் போது ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்தது.
ஆளுநர் அழைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மசோதா தொடர்பாக ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முக்கிய 10 நிலுவை கோப்புகள்
தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசேதா மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆளுநர், முதலமைச்சருக்கு விடுத்த அழைப்பை ஏற்று முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோருடன் ஆளுநரை சந்தித்தனர். ஆளுநரிடம் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையல் தேவையின்றி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதை திரும்ப பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டார்.
முன்னாள் அமைச்சர்கள் வழக்குகள்
ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.
உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்ககளுக்கான உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோப்புற்கு ஒப்புதல் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டது. பொதுவாக அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போது தான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்ககூடிய வகையில் ஆளுநர் செயல்பாடு அமையும் என்றும் முதல்வர் எடுத்துரைத்தார்.
ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துப் பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதா மற்றும் கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டு கொண்டார்.
ஆலோசனையின் போது அரசின் சார்பாக மேற்படி கருத்துகளை முதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமை செயலாளரும் விரிவாக எடுத்து கூறினர். முதலமைச்சர் சார்பில் ஆளுநருக்கு கடிதம் ஓன்றும் வழங்கப்பட்டது. இந்த கடித்ததில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தான் மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதோடு நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.