கடனுதவி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒரு செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்தும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.
உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது எதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் பதிவு செய்யலாம். உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ. 6 லட்சம் திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பயனாளிகள் 5 சதவிதம் முதல் 10 சதவிதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.