கடலூர் முதுநகர் கவிகாளமேக தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி (45). இவர் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஷரா கார்க்யிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த மனுவில், தனது கணவர் சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியன் வேலை செய்துவிட்டுத் திரும்பிய நிலையில், தற்போது மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், திருச்சோபுரத்தில் ரத்தப் பரிசோதனை ஆய்வகம் நடத்தி வரும் ரமேஷ் மனைவி அனிதா தனக்குப் பழக்கமானார். என் கணவர் சம்பாதித்த பணத்தை நான் வைத்திருப்பதை தெரிந்துகொண்டு, அவரது மாமா நடராஜன் மகன் சுந்தர் வெட்டிவேர் மற்றும் முந்திரி வியாபாரம் செய்து வருவதாகவும், மேலும் ஆய்வக விரிவாக்கத்திற்கு உங்கள் பணத்தைக் கொடுத்தால் உங்களை பங்குதாரராகச் சேர்த்து அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினார்.
இதனை நம்பி 8 தவணைகளில் ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளேன். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அனிதா என்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது, பணத்தைக் கொடுக்க முடியாது எனக் கூறி மிரட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட குற்றப் பிரிவில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அனிதாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.