தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சண்டி பேசுகையில் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ள குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.04 அடி ஆகும். அணையின் முழு கொள்ளளவு 700.00 கன அடியாகும். இன்று (நேற்று) காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.04 அடி.
மற்றும் அணையின் கொள்ளளவு 700.00 கன அடி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை தேவைக்கான குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 106.92 க.அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையில் மீதம் உள்ள நீர் 593.08 கன.அடி பாசனத்திற்கான தண்ணீர் இருப்பு ஆகும்.
மேலும் குப்பநத்தம் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு இன்று (நேற்று) முதல் நாள் ஒன்றுக்கு 240 கன அடி வீதம் 3.05.2025 அன்று காலை 10.00 மணி வரை 28 நாட்களுக்கு 9432.76 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் ஒரே தவணையாக 580.61 மி.கன.அடி தண்ணீர் திறந்து விடப்படும்.
எனவே, விவசாயிகள் இப்பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளர்களின் அறிவுரையின்படி, சிறந்த முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி கூறினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார், செயற்பொறியாளர் (நீர்;வளத்துறை) அறிவழகன், உதவி செயற்பொறியாளர் (திருவண்ணாமலை) சிவக்குமார், உதவி பொறியாளர் (செங்கம்) ஹரிஹரன், செங்கம் வட்டாட்சியர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.