சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும், முதலமைச்சர் சாலைshow நடத்த உள்ள பாதையையும் காவல் ஆணையர் ஆய்வு செய்த நிலையில், 2-வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்றும் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் காவல் ஆணையர் சோழவரம் வழியே அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆணையரின் வாகனத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் அடுத்தடுத்த வாகனங்கள் காவல் ஆணையரின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காவல் ஆணையரின் கார் அப்பளம் போல பயங்கரமாக நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயமடைந்தார்.
தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தில் காயமடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிர் தப்பிய காவல் ஆணையர் மாற்று வாகனம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.