ஒட்டன்சத்திரம் பிரபல தனியார் மருத்துவமனைக்குத் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 40 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் செம்மடைப்பட்டி பழக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் – காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இம்மாணவிக்குக் காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது. இதனால் கடந்த 09.10.2021-ஆம் தேதி நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் பழைய மார்க்கெட் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ. 20 ஆயிரம் செலுத்துமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பணத்தைக் கட்டிய பிறகு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய மூவரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் சிறுமிக்குக் காதில் இருந்து தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
தங்கள் மகளுக்குத் தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆரோக்கிய செல்வ ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர்.
விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைத்தீர் ஆணையத் தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ. 30 லட்சம், மருத்துவர்கள் நாச்சிமுத்து ரூ. 4 லட்சம், சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும் என்றும், மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ. 20,000 சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்தச் சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.