திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.