கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம்
தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிறப்பு பதிவு
குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான
அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின்
பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பெயரில்லா பிறப்பு சான்றிதழினால் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை.
பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற,
பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற மற்றும் வயது குறித்த இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு
செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து
வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித
கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
தவறினால் 12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி
குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை
பதிவு செய்ய இயலாது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தை பிறந்து 15 வருடங்கள்
நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக தமிழ்நாடு பிறப்பு-இறப்பு
விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மேலும் 5 ஆண்டுகள்
01.01.2020 முதல் 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் நீட்டிப்பு
நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு
செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும்
குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்றிதழ் பெற வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு
பதிவாளரையும், நகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு நகராட்சி அலுவலகத்தில்
விண்ணப்பித்தும் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
இனிவரும் காலங்களில் கால அவகாச நீட்டிப்பு வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு
இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை கள்ளக்குறிச்சிமாவட்ட
பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட வேண்டுமென
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.