கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவிக்கையில், கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகின்றன.
அதேபோல் இந்த ஆண்டும் இன்று முதல் பிப்.14ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோழிகளை வளர்க்கும் அனைத்து பொதுமக்களும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனால் கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயின் காரணமான இறப்பினை தவிர்த்து, கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம்.
மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.