மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :
முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமெனவும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து இளைஞர்களும் வேலைவாய்ப்பை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்பதற்காகவும், பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனத்தின் சென்னை மண்டல தலைவர், துணைத்தலைவர் மற்றும் குழுத்தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேளாண்மையை முதன்மையாக கொண்ட ஊரக பகுதிகள் நிறைந்த மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் பட்டய மற்றும் பட்டப்படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வாறு கல்வி நிறுவனங்களில் பயின்ற இளைஞர்களுக்கு இந்த பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும். மேலும், வேளாண் தொடர்பான தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் அமைக்கும் பட்சத்தில் பின்தங்கியுள்ள இப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு திட்டங்கள் மூலமாக வங்கி கடனுதவிகள் வழங்கும் அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், சிட்கோ, டிக், மாவட்ட முன்னோடி வங்கி, தாட்கோ மற்றும் மின் வாரியம், சிப்காட் உள்ளிட்ட அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் லோட்டே இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை மண்டல நிர்வாக இயக்குநர் மிலன் வாஹி, சி.ஐ.ஐ. துணைத் தலைவர் அஜித் சோர்டியா, எம்எஸ்எம்இ குழுத்தலைவர் ஆர்.வி.சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.