திருவண்ணாமலை அருகே எலக்ட்ரிக் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பங்களா தெருவை சேர்ந்தவர் தனபால்ராஜ் (வயது 60). இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களது உறவினர் சுந்தரமூர்த்தி (70). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் சொந்த வேலையாக எல்க்ட்ரிக் பைக்கில் வெளியே சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை – திருக்கோவிலுார் ரோட்டில் உள்ள டி-கல்லேரி கூட்ரோடு அருகே இவர்கள் மூவரும் ரோட்டை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், திடீரென இவர்களது பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்த தனபால்ராஜ், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த வெறையூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த தம்பதியரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.