ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து, நான்கிற்கு இன்று சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி புதன் கிழமையிலிருந்து, டெர்மினல் ஒன்றிலிருந்து, டெர்மினல் 4 க்கு மாற்றப்படுகின்றன.
இதனால் ஏற்கனவே உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றில், நெரிசல்கள் குறைந்து, பயணிகளுக்கு தாராளமான இடவசதிகள் கிடைக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்நாட்டு முனையம், ஒரே முனையமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து, உள்நாட்டு முனையம், இரு முனையங்களாக டெர்மினல் ஒன்று, டெர்மினல் நான்கு, என்று செயல்பட்டு வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து, ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடுகள் விமானங்கள், கடந்த நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து, இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று 23 ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின்,உள்நாட்டு விமான சேவைகள், அனைத்தும் புதிய உள்நாட்டு முனையமான, டெர்மினல் 4 க்கு மாற்றப்பட்டுள்ளன.

அதைப் போல் வரும் 27 ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து, தற்போது டெர்மினல் ஒன்றில் இருந்து இயக்கப்பட்டு வரும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின், வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும், புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல், 4 இல் இருந்து இயங்கத் தொடங்குகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.