திருப்பத்துார் அருகே, வயிற்று வலியால் துடித்த பெண்ணை, ஒன்றரை மணி நேரம் அலைக் கழித்து, டாக்டர் கேலி செய்த வீடியோ வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் சபீர் அகமது, 40. இவர் மனைவி மொகரம், 37. இவருக்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும், சிகிச்சை அளிக்காததால், உறவினர்கள், அங்கிருந்த டாக்டர் கார்த்தி கேயன், 39, என்பவரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், ‘நான் எலும்பு முறிவு டாக்டர். எனக்கு இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க தெரியாது’ என கூறிவிட்டு, அங்கிருந்த கம்பவுண்டரிடம், ‘ஏதாவது ஒரு ஊசியை குத்தி, இங்கிருந்து அவரை அனுப்பி வையுங்கள் அல்லது வேலுார் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கிறேன். காய்கறி வாங்க செல்லும்போது, ஒரு கடையில் இல்லாத காயை வேறு கடையில் வாங்குவதில்லையா, அதுபோல், வேறுமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுங்கள்’ என கேலி செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டாக்டரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தட் பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்