திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அண்மையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் திரு. குமரேசன் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட தொல்லியல் ஆலோசகர் பி. வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ம.பிரகாஷ், ச.பாலமுருகன், புகைப்படக் கலைஞர்சு. சேது, சி.பழனிசாமி, மதன்மோகன், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாய்வில் 3 புதிய சோழர்கால துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் 6 ஆம் பிரகாரத்தில் அண்மையில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டிய போது கோயில் கட்டுமான கற்பலகைகள், தூண்கள், உள்ளிட்ட பகுதிகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கற்களை பாதுகாப்பு கருதி தற்போது கோயிலின் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தகற்களை ஆய்வு செய்த போது அதிட்டானத்தின் ஒரு பகுதியான விருத்தகு முதத்தில் 5 வரி கல்வெட்டு உள்ளது. மற்றொன்று கோயில் சுவர் பகுதியில் உள்ள கட்டுமானப் பகுதி, இதில் குறுஞ்சிற்பங்களும் 6 வரியில் கல்வெடும் காணப்படுகின்றது. மற்றொறு கல்வெட்டும் அதே பகுதியில் கிடைக்கப் பெற்றது.
இந்த மூன்று கல்வெட்டுகளையும் படித்து விளக்கமளித்த தொல்லியல் ஆலோசகர் பி. வெங்கடேசன் கூறியதாவது, விருத்தக் குமுதப் பகுதியில் உள்ள கல்வெட்டு மன்னர் பெயர் இல்லாத, 28 வது ஆட்சியாண்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை வயிர மேகசதுர்வேதி மங்கலத்து சபையார் திருவண்ணாமலை மகாதேவர்க்கு அதாவது அண்ணாமலையாருக்கு அக்கோயிலில் உள்ள பண்டாரமான கருவூலத்தில் இருக்கும் பொன் முதலானவற்றில் கிடைக்கும் வட்டியிலிருந்து ஆண்டாண்டு தோறும் பங்குனி திருவிழா நடத்துவது பற்றி குறிப்படப்பட்டுள்ளது. இது துண்டு கல்வெட்டு என்பதால் மற்ற விவரங்கள் அறியப் பெறவில்லை. இந்த துண்டுகல் வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது முதலாம் இராஜராஜன் காலத்தியதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது மற்றொரு துண்டுகல் வெட்டில் ஒப்பந்தங்களாக சில குறிப்புகள் உள்னன. அதில், கோயில் இறைவற்கு தினசரி வழிபாட்டிற்கு ஒருகலம் நெல்லும் 3 குறுணி அரிசியும் வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு ஒப்பந்தமாக உணவுபடைத்தலின் போது நான்கு நாழி நெய் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பண்டாரத்தில் வைப்பாக உள்ள ஒரு கழஞ்சு பொன்னும் அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இந்த ஏற்பாடு நடத்திவர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு உள்ள ஜகதி என்ற உறுப்பில் பல அழகிய சோழர் கால குறுஞ்சிற்பங்கள் உள்ளன, அவைக ஜசம்ஹாரமூர்த்தி, மார்கண்டேயன் சிற்பம், உள்ளிட்ட பல சிற்பங்கள்உள்ளன. எழுத்தமைதியைக் கொண்டு இந்த கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்க்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என அறியப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள மற்றொரு துண்டு கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. இதுவும் கோயில் அதிட்டானத்தின் ஒரு துண்டு பகுதியாக கிடைக்கிறது. இந்த கல்வெட்டில் திருவண்ணாமலை உடைய தேவர்க்கு, செட்டியாகிய சதூரான பெருந்தச்சனுக்கு வைச்ச பூண்டி நிலமாவது என்றும், புடவை செய்து கொடுத்தோம் என்றும், அண்ணா நாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் கோயில் என்றும் பெரிய செறுவு காணிக்கையாக செய்து குடுத்தேன் இம்மடமுடைய என்றும் துண்டு துண்டாக கல்வெட்டு வரி கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி புலப்படுகிறது. 5 வது வரியில் அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரிஸ்வரம் ஸ்ரீகோயில் என்ற தொடரிலிருந்து இக்கோயிலில் சோழ அரசி செம்பியன் மாதேவியார் திருவண்ணாமலைக்கு அருகில் அல்லது இக்கோயிலில் தனது பெயரில் செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் என்ற கோயிலை அமைத்த செய்தி கிடைக்கிறது. இந்த கோயில் தற்போது எங்குள்ளது என்பது பற்றிய எந்த குறிப்பும் மற்ற கல்வெட்டிலோ அல்லது வேறு எங்கேயும் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டில் நகரீஸ்வரம் என்று குறிப்பிடுவது திருவண்ணாமலையை குறிப்பதாக கருத இடம் உள்ளது. அவ்வாறெனில் திருவண்ணாமலை 9, 10 நூற்றாண்டிலேயே நகர் மயமான ஒரு ஊராக இருந்திருக்கும் என்று அறியலாம். இந்த கல்வெட்டின் காலம் 10 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
இந்த கோயிலில் கிடைத்த 3 துண்டு கல்வெட்டுகளும் சோழர்கள் காலத்தியது என்பதாலும் 3 கல்வெட்டுகளிலும் இதுவரை அறியப் பெறாத செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கல்வெட்டுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புனரமைப்பின் போது வேறு கற்கள் பயன்படுத்தி வரலாற்றுக்கு முக்கியமான செய்திகளைத் தரும் இந்த கல்வெட்டுகள் கொண்ட கற்களை அப்புறப்படுத்தி உள்ளனர். திருவண்ணாமலை கோயிலில் மிகுந்த அளவில் சோழர்கள் கால கல்வெட்டுகளும் அழகிய சிறப்பங்களும் இருந்திருக்கும் என்றும் திருவண்ணாமலை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகரமாக இருந்துள்ளது என்றும் அதற்கான சான்றுகள் இந்த துண்டுகல் வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மேலும் இந்த துண்டுக் கல்வெட்டுகளை பாதுகாப்பாக கோயில் வளாகத்தில் வைத்து பாதுகாக்குமாறும் ஆவணப்படுத்து மாறும் வரலாற்று ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

