”தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறை எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, தமிழ்நாட்டை வெளிப்படையாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர். இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பா.ஜ.க தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.