டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று லாரி ஸ்டிரைக் தொடங்கியது.
இந்த லாரி ஸ்டிரைக்கைத் தொடர்ந்து சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இந்த ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் முழு ஆதரவு கிட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் லாரி மூலம் செல்லும் தண்ணீர் விநியோகம். சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை, அடியோடு நிறுத்தப்பட்டதால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜீன்ஸ் உள்பட ஆயத்த ஆடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு தரப்பில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கினர். இதில் முடிவுகள் எட்டாத பட்சத்தில் மாநிலத்தில் நிலைமை சீராகாது. பல்வேறு பொருட்களில் விலையும் எகிறக்கூடும். தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்திருப்பதால் லாரி ஸ்டிரைக்கால் தமிழக கர்நாடக இடையே செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.