”சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களவையில் வக்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்ப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, 232 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்து ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.
திரும்பப் பெறணும்
எண்ணிக்கை கூடுதலாக கிடைத்து இருக்கலாம். ஆனால் இந்த சட்டத்திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்பப் பெற வேண்டியது நமது கருத்து. அதை தான் நாம் இங்கு தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி இருந்தோம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2 மணியளவில் வக்ப் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்.
வழக்குத் தொடருவோம்
இதனை உணர்த்தும் வகையில், இன்று (நேற்று)கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளோம். சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழகம் போராடும், வெற்றி பெறும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கருப்பு பேட்ஜ் அணிந்த திமுக., கூட்டணிக் கட்சிகள்
சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்தபடி தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். லோக்சபாவில் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.
அதிமுக, பாமக வலியுறுத்தல்
வக்ப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரை தொடர்பாக பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவாக இருக்கும் என கூறினார்.
இதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
வக்ப் வாரிய சட்டத்திருத்தம் பாசிச சக்திகளின் வரம்பற்ற தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் விமர்சித்தார். வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய தாக்குதலை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து கூறினார்.
பிரிவினை இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்பதால், இது போன்ற மசோதாக்களை பாஜக கொண்டு வருவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.
இந்திய நாடு பாஜகவிற்கு மட்டுமே சொந்தமல்ல என்று குறிப்பிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமையில் கை வைத்திருப்பதாக விமர்சித்தார்.
இந்நிலையில், அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.