அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அதிமுகவில் தேர்தல் கூட்டணி குறித்த பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து பேசியதாகவும், அதில் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் அதிமுகவில் இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. பின்னர் அதிமுக முக்கியஸ்தர்கள் அதை சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும், தற்போது மீண்டும் டெல்லிக்கு சென்று பாஜக மேலிடத்து முக்கிய புள்ளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவுடனான கூட்டணிக்கு இபிஎஸ் விதித்துள்ள நிபந்தனைகளைத் தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி சகவாசம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் செங்கோட்டையன் அதிமுகவில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் முக்கிய தலைவராக இருக்கும் செங்கோட்டையனை அதிமுகவுக்கு தலைமை ஏற்கச் செய்ய வேலைகள் நடக்கின்றனவோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.