கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியரிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த அன்பழகன் (59) என்பவர் 6 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் வகுப்பறையில் மாணவியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார்.
இது குறித்து மாணவியர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, மாணவியர்களின் பெற்றோர் பள்ளி ஆசிரியர் அன்பழகன் மீது புகார் தெரிவித்தனர். மேலும், பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ஆசிரியர் அன்பழகனிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டதில், மாணவியர்களிடம் பேசியது உண்மை எனத் தெரியவந்தது.
இந்நிலையில் ஆசிரியர் அன்பழகனை, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.