கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலுள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதி பெறாமல் சேம்பர் செங்கல் சூளை, நாட்டு செங்கல் சூளை வேலை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விபரம் பெற்றும் செங்கல் சூளைக்கு பதிவுக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆண்டு கனிமக் கட்டணம் ஆகியவற்றை அரசுக்கு செலுத்தி முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்.
மேலும், அரசு அனுமதியின்றி நாட்டு செங்கல் சூளை வைத்திருப்பவர் மீதும், செங்கல் சூளைக்கான மண் இருப்பு வைத்திருப்போர் மீதும், மண் கடத்துவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.