விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6 நாள் உற்சவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு விழாக்களும் நடைபெறும். மேலும், ஒவ்வொரு வருடமும் முக்கிய திருவிழாவாக மாசி மகப் பெருவிழாவும் நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மாசி மகத் திருவிழா வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 3ஆம் தேதி நடந்தது.
அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகாதீபாரதனைகள் மற்றும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 6ஆம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று கோயிலை கட்டிய விபச்சித்து முனிவருக்கு பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தருளும் ஐதீகத் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை பழமலைநாதர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் மகா மண்டபத்தில் எழுந்தருள, அதற்கு நேர் எதிரில் அமைந்துள்ள சித்தர் மண்டபத்தில் விபச்சித்து முனிவர் எழுந்தருள, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமூர்த்திகளும் விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தருள மகா தீபாரதனை நடைபெற்றது.
அப்போது, கைலாய வாத்தியங்கள் முழங்க, பழமலைநாதரை தாலாட்டி, பக்தர்களின் நமசிவாய கோஷங்கள் ஒலிக்க பஞ்ச மூர்த்திகளும் கோயிலை வலம் வந்து சன்னதி வீதி கிழக்கு கோபுர வாயில் முன்பு சுவாமிகள் வெளியே வர பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தவாறு வீதி உலா வர, தெருவடைச்சான் திருவிழா நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சன்னதி வீதி, கடைவீதி, தென்கோட்டை வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்ததால், பக்தர்களும் வணிகர்களும் சுவாமிக்கு புத்தாடைகள் கொடுத்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு வரை தெருவடைச்சான் திருவிழா நடந்ததால், போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.