மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தா விட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறி, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என நிர்பந்திக்கக் கூடாது’ என்று அ.தி.மு.க., – பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும் மத்திய பா.ஜ.க.,அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (6ம் தேதி) பா.ஜ.க., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியன் மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொய்யான காரணங்களைக் காட்டி மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்க மறுக்கிறது. மும்மொழி கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.