பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை ஆய்வு செய்தது. 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதலை வழங்கி உள்ளது.
நேரடி வரிச்சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள இந்த மசோதா உதவும் என்றும் இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் அல்லது நீண்ட வாக்கியங்கள் எதுவும் இருக்காது என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதால், இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“புதிய வருமான வரி மசோதா நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். பின்னர் அது நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படும். அந்த குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.” இவ்வாறு நிதி அமைச்சார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.